“தாலிக்கு தங்கம் திட்டம் தொடர வேண்டும்” - வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

தாலிக்கு தங்கம் திட்டம் தொடர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கை மிக குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் என மாற்றியமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்றும் இந்த மாணவிகள் ஏற்கனவே, பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தாலிக்கு தங்கம் திட்டம் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். மகளிர் கல்வியை ஊக்கப்படுத்துவது என்பது சமூக நீதியை வலுப்படுத்துவதற்கான வலிமுறை என்று தெரிவித்த அவர், மாணவிகளுக்கு ரூ,1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாகவும், அதே நேரம் தாலிக்கு தங்கம் திட்டம் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story