இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வாலிபர் கைது

இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வாலிபரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கோபிநாதன் (வயது 23), தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார். அப்போது அவருக்கு அதே கல்லூரியில் படித்த கோவையை சேர்ந்த ஒரு 22 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவரும் பிரிந்து சென்றனர். பின் அடிக்கடி இருவரும் வீடியோ கால் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதல் ஜோடி இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் சில நாட்கள் இருவரும் ஒருவரிடம், ஒருவர் பேசாமல் இருந்து உள்ளனர். இதனிடையே கோபிநாதன், அந்த இளம்பெண்ணிடம் தொடர்ந்து தன்னுடன் பேச வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் தன்னுடன் பேச வில்லை என்றால் அந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக தெரிவித்து உள்ளார். இருப்பினும் அந்த இளம்பெண் பயப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கோபிநாதன், அந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாதனை கைது செய்து, கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story