சாலை விரிவாக்க பணியின்போது விபரீதம்: ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலி


சாலை விரிவாக்க பணியின்போது விபரீதம்: ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 May 2022 12:26 AM IST (Updated: 6 May 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்க பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டம், பத்தமடை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காதர் மைதீன் (வயது 35). இவர் நேற்று தனது மனைவி பக்கீராள் பானு (29), மகன் ஷேக் மன்சூர் (4), பக்கீராள் பானுவின் சகோதரி ரகுமத் பீவி (27), அவருடைய மகள் அசன் பாத்திமா (7) ஆகிய 5 பேரும் ஆட்டோவில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோவை காதர் மைதீன் ஓட்டினார். இந்த ஆட்டோ பத்தமடை குளத்து பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அங்கு நடந்து வரும் நெல்லை-பாபநாசம் சாலை விரிவாக்க பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத ஆலமரத்தை அகற்றும் பணி நடந்தது. இதில் திடீரென அந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது.

2 பேர் பரிதாப சாவு

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த காதர் மைதீன், ரகுமத் பீவி ஆகிய2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் காயம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்து அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் பொக்லைன் எந்திரத்தை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மரங்களை அகற்றும் பணி நடைபெற்ற காரணத்தால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறி இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேரன்மாதேவி ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Next Story