ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல்

காட்பாடியில் ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
காட்பாடியில் ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
ரெயிலில் கஞ்சா கடத்தல்
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. அதனை தடுக்க ரெயில்வே போலீசார் ஓடும் ரெயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹாட்டியாவிலிருந்து யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அந்த ரெயிலில் சேலம் உட்கோட்ட போலீசார் சத்தியமூர்த்தி, முத்துவேல் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 22 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இவற்றின் எடை 24 கிலோ ஆகும். அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 வாலிபர்கள் கைது
மேலும் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததாக ஓடிசா மாநிலம் போலாங்கீர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சாகு (வயது32), சுபல்பேக் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் எங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.