திருவெண்ணெய்நல்லூர் அருகேமினிலாரி கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 3 பேர் படுகாயம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மினிலாரி கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் நேற்று ஆமூர் கிராமத்தில் இருந்து மணக்குப்பம் நோக்கி மினிலாரியை ஓட்டிச் சென்றான். அப்போது ஆமூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அங்கு பஸ்சுக்காக காத்திருந்த அதேஊரை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மினிலாரியை தடுத்து நிறுத்தி, அதனை ஓட்டி வந்த சிறுவனிடம் லிப்ட் கேட்டு மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புறப்பட்டனர். மணக்குப்பம் கிராம வளைவில் திரும்பியபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆமூரை சேர்ந்த மாணவர்கள் விமல்ராஜ்(வயது 11), தமிழரசன்(14), அய்யனார்(15) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் வந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஓட்டுனர் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.