4 பேருக்கு 4-ந்தேதி வரை காவல் நீடிப்பு

4 பேருக்கு 4-ந்தேதி வரை காவல் நீடிப்பு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு சிகாமணிக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிகாமணி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ததன்பேரில் ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அவர் மட்டும் ஜாமீனில் உள்ளார். மற்ற 4 பேரும் சிறையில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு நீதிபதி கோபிநாத் முன்பு விசாரணைக்கு வந்தது. சிகாமணி நேரில் ஆஜரானார். மற்ற 4 பேரும் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 4-ந்தேதி வரை 4 பேரின் சிறைக்காவலை நீடித்து உத்தரவிட்டார்.