தனுஷ்கோடி 3-வது மணல் திட்டில் தவித்த 7 அகதிகள்


தனுஷ்கோடி 3-வது மணல் திட்டில் தவித்த 7 அகதிகள்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி 3-வது மணல் திட்டில் 7 அகதிகள் தவித்தனர். அவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

தனுஷ்கோடி 3-வது மணல் திட்டில் 7 அகதிகள் தவித்தனர். அவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இதுவரை 200-க்கும் அதிகமானோர் அகதிகளாக வந்துள்ளனர். இந்தநிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டுப் பகுதியில் அகதிகள் சிலர் தவிப்பதாக மீனவர்கள் மூலம் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று 3-வது மணல் திட்டு பகுதியில் தவித்துக் கொண்டிருந்த 7 அகதிகளை கப்பலில் அழைத்து வந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வைத்து ராமேசுவரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

7 அகதிகள் வருகை

தொடர்ந்து கடலோர போலீசார் இந்த 7 அகதிகளையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி மண்டபத்தில் உள்ள கடலோர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அந்த அகதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நியூட்டன் வில்லியம் (வயது 43), இவரது மனைவி வனிதா (38), இவர்களது குழந்தைகள் விஷால்(15) தோனி (10), ஜோன் (வயது 8). நியூட்டன் வில்லியத்தின் தங்கை ஷாலினி, இவரது குழந்தை ஆதிஷ் (1½ வயது) என்பதும் தெரியவந்தது.

இதில் அகதி வனிதா கூறியதாவது:-

வீட்டை விற்றோம்

இலங்கையில் இன்னும் பொருளாதார நெருக்கடி சரியாகவில்லை. குறிப்பாக மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் அதிகமாகதான் உள்ளது. அரிசி ஒரு கிலோ 250 ரூபாய், பருப்பு கிலோ 400 ரூபாய், தக்காளி கிலோ 300 ரூபாய், கேரட் கிலோ 400 ரூபாய், பிரட் 1 பாக்கெட் 100 ரூபாய், பிஸ்கட் ஒரு பாக்கெட் 100 ரூபாய் என அனைத்து வகை பொருட்களின் விலையும் அதிகமாகவே உள்ளன. வேலை வாய்ப்புகளும் இல்லை ஒரு நாளைக்கு குடும்பத்தை நடத்துவதற்கு சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை இருந்தால் மட்டுமே தான் குடும்பத்தை நடத்த முடியும். அந்த அளவுக்கு அனைத்து வகை பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.

வேலை வாய்ப்புகளும் இல்லாததால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாகவே உள்ளதால் குழந்தைகளுடன் அங்கு வாழ முடியாத சூழ்நிலை இருந்து வருவதால் வாழ்ந்து வந்த வீட்டை விற்று அதில் கிடைத்த ரூ.4 லட்சத்தை படகோட்டிக்கு கொடுத்து தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின்னர் 7 அகதிகளும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story