15 மீனவ பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும்


15 மீனவ பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பிரதான அலை தடுப்புச்சுவர் நீட்டிப்பு பணி தொடர்பாக 15 மீனவ பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பிரதான அலை தடுப்புச்சுவர் நீட்டிப்பு பணி தொடர்பாக 15 மீனவ பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக பிரதான அலை தடுப்புச் சுவர் நீட்டிப்பு பணியின் செயல்பாடு மற்றும் முன்னேற்றத்தை கண்காணிக்க குழு அமைப்பது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவ பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் பேசுகையில் கூறியதாவது:-

உயிரிழப்பு ஏற்படக்கூடாது

தேங்காப்பட்டணம் துறைமுகம் மூலமாக இரயுமன்துறை, தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த மீன்பிடி துறைமுகத்தில் முகப்பு தோற்றத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அரசின் வரைபடத்தின்படி அந்த கற்கள் அங்கு அமைக்கப்படவில்லை. சிறிய, சிறிய கற்கள் போடப்பட்டு வருவதால் ராட்சத அலைகள் அந்த கற்களை இழுத்துச் சென்று விடுகிறது.

ஏற்கனவே தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் 28 பேர் பலியாகி உள்ளனர். இனிமேலும் உயிர் இழப்பு ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மீனவர்கள் பலியானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்னும் உயிரிழப்பு நடைபெறாமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

15 பிரதிநிதிகள் குழு

ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். அதற்குள் மீதமுள்ள பணிகளையும் முடிக்க வேண்டும். கண்காணிப்பு அதிகாரியை மாற்ற வேண்டும்.

பணியை கண்காணிக்க இரயுமன்துறை மண்டலத்தில் உள்ள 7 கிராமங்களில் இருந்து தலா ஒரு பிரதிநிதியையும், தூத்தூர் மண்டலத்தில் உள்ள 8 கிராமங்களில் இருந்து தலா ஒரு பிரதிநிதியும் என 15 பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். மேலும் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற துறை முகங்களில் இருந்தும், விழிஞ்ஞம், கொச்சி போன்ற துறைமுகங்கல் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வசதியாக அனுமதி பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

தினமும் 100 லோடு கல்

பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பதிலளித்து பேசியதாவது:-

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் வரைபடத்தின் படி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரமான கற்கள் போடுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். தினமும் 100 லோடு கற்கள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தூத்தூர், இரயுமன்துறை மண்டலத்தில் உள்ள 15 மீனவ கிராமங்களிலும் தலா ஒரு மீனவ பிரதிநிதிகளை வைத்து குழு அமைக்கப்படும். அந்த குழுவின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story