இந்திய கடற்படை அலுவலகத்தில் புகுந்த வாலிபரால் பரபரப்பு

நாகையில் இந்திய கடற்படை அலுவலகத்தில் புகுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் இந்திய கடற்படை அலுவலகத்தில் புகுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவர்ஏரி குதித்த வாலிபர்
நாகையில் இந்திய கடற்படை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடற்படை அலுவலக சுற்றுச்சுவரில் திடீரென மர்ம நபர் ஒருவர் ஏரி குதித்து அலுவலகத்திற்குள் புகுந்தார். இதை சற்றும் எதிர்பாராத கடற்படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து கடற்படை அதிகாரிகள், நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் கடதிபரம்ப புள்ளுறிட்டி பகுதியை சேர்ந்த நவுசாத் என்பவரது மகன் நிஸாத் (வயது 27) என்பதும், இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சென்னைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து ரெயில் மூலம் நாகூர் தர்காவுக்கு வந்து தங்கி உள்ளார். இந்தநிலையில் நேற்று இந்திய கடற்படை அலுவலக சுற்றுச் சுவரில் ஏறி குதித்துள்ளார். எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.