காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க காசு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகன்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண் கடலூரில் பரபரப்பு

காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க காசு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகன்களுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 மகன்களுடன் வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த சிறுவர்கள் தங்கள் கைககளில் 'காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை, உங்களால் முடிந்தததை கொடுங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை பிடித்தபடி நின்றனர். மேலும் அந்த பெண், துண்டை தரையில் விரித்து காசு கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பண்ருட்டி அடுத்த ஒரையூரை சேர்ந்த பாரதிராஜா மனைவி வசந்தி என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாரிம் அவர் கூறுகையில் எனக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் பாரதிராஜா, வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
பணம் கேட்ட போலீசார்
இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது, என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்தார். இருப்பினும் தற்போது அவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து புகார் அளிக்க சென்ற போது போலீசார், என்னிடம் பணம் கேட்டனர். அவர்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லாததால், புகார் குறித்து விசாரணை நடத்தவில்லை. ஆகையால் போலீசாருக்கு பணம் கொடுப்பதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
அதற்கு அங்கிருந்த போலீசார், இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பேரில் வசந்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.