கூட்டணியில் இருப்பதற்காக எல்லா கட்சிகளும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை- கே.எஸ்.அழகிரி

கூட்டணியில் இருப்பதற்காக எல்லா கட்சிகளும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் காரணமாக தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே சமீபத்தில் சிறு சிறு உரசல்கள், சலசலப்புகள் ஏற்பட்டது.
விடுவிக்கப்பட்ட 7 பேரும் அப்பாவிகள் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. குறிப்பாக கடந்த திங்கட்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ராஜீவ் கொலை கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரனை தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது ரவிச்சந்திரன் அப்பாவி என்று தெரிவித்தார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை செய்யபபட்டதையோ அல்லது அவர்கள் ஒன்னும் தெரியாத அப்பாவிகள் என்பதையோ ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அழகிரி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை யாரும் ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கு மக்கள ஆதரவு கிடையாது. அதுபோல ராஜீவை படுகொலை செய்தவர்களையும் மக்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் சில கட்சிகள் இதை மையமாக வைத்து அரசியல் செய்கின்றன.
அத்தகைய கட்சிகள் இந்த பிரச்சினையை வைத்து தேர்தல் களத்தில் நின்றதாக வரலாறு கிடையாது. எதிர் காலத்தில் இந்த விவகாரத்தை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஒரு கூட்டணியில் இருப்பதற்காக அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.
எல்லா பிரச்சினைகளிலும் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் பேச இயலாது. பல்வேறு சித்தாந் தங்களின் அடிப்படையில் கூட்டணிகள் அமைகின்றன. மதச் சார்பின்மை என்ற ஒற்றை தன்மையில் கூட்டணி தற்போது அமைந்துள்ளது.
10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் கூட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களுடன் இருப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்' என்றார்.