காரிமங்கலத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம்-பானிபூரி கடைக்காரர் போக்சோவில் கைது

காரிமங்கலம்:
காரிமங்கலத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த பானிபூரி கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-1 மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 23). இவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதனால் அந்த மாணவிக்கும், விக்னேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் 8-ந் தேதி மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கைது
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளஸ்-1 மாணவியை, பானிபூரி கடைக்காரர் விக்னேஷ் கடத்தி சென்று திருமணம் செய்ததும், அவர்கள் தேனி மாவட்டத்தில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேனி மாவட்டத்துக்கு சென்று, விக்னேசை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் காரிமங்கலத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மாணவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தர்மபுரியில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.