காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால்சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவி நீர்வரத்து இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாறைகளாக காட்சியளித்தது. இதனால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் ஹைவேவிஸ் மற்றும் சுருளி மலைப்பகுதியில் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அருவி பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருந்ததால் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து நேற்று முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு மாலை 4 மணிக்குள் வர வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.