சீனாபுரம் கால்நடை சந்தையில்ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை

சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானது
சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.
கால்நடை சந்தை
பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் நேற்று கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கோவை மாவட்டம் அன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 100-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 125-ம், சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 120-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 200-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
ரூ.1½ கோடி
சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. சீனாபுரம் கால்நடை சந்தையில் பசு மாடுகள் மற்றும் கிடாரி கன்றுக்குட்டிகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அறச்சலூர், சென்னிமலை, அவல்பூந்துறை, சிவகிரி, எழுமாத்தூர், பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி, திங்களூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, குன்னத்தூர் மற்றும் திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் இங்கு வந்து மாடுகளை விலை பேசி வாங்கி சென்றனர்.