உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென்மாவட்ட அளவில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்கள் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று இரவு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும். மேலும் தமிழ், ஆங்கில வருட பிறப்புக்கள், ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் திறப்பு எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மடப்புரம் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் எண்ணிக்கையின் போது கோவில் கண்காணிப்பாளர் வசந்தா, ஆய்வாளர் அய்யனார், அறங்காவல் குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், சண்முகவேலு மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். உண்டியலில் ரொக்கமாக ரூ. 19 லட்சத்து 98 ஆயிரத்து 964-ம், தங்கம் 135 கிராம், வெள்ளி 90 கிராமும் இருந்தது.