நெல்லை அருகே அண்ணன்-தம்பி கொடூரக்கொலை


நெல்லை அருகே, அண்ணன்-தம்பி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களை பணத்தகராறில் தீர்த்து கட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

அண்ணன்-தம்பி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 58). பேரூராட்சி தூய்மை பணியாளர். இவருடைய முதல் மனைவி பாண்டியம்மாள். இவர்களுடைய மகன் மணிகண்டன் (25), மகள் பிரியதர்ஷனி (23). இதில், பிரியதர்ஷினிக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

பாண்டியம்மாள் 20 வருடங்களுக்கு முன்பு இறந்ததையடுத்து, 2-வதாக முருகேஸ்வரி (33) என்ற பெண்ணை நாகராஜ் திருமணம் செய்தார். இவர்களுடைய மகன் சபரீஸ்வரன் (13). இவர்களில் மணிகண்டன் 9-ம் வகுப்பும், சபரீஸ்வரன் 3-ம் வகுப்பும் படித்துள்ளனர்.

வெங்காயம் விற்பனை

மணிகண்டன் வத்தலகுண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியம்மாளின் தம்பி அய்யப்பன் என்பவருக்கு சொந்தமான லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மார்க்கெட், நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டுகளில் வெங்காயத்தை மொத்த விலைக்கு வாங்கி அதனை லோடு ஆட்டோவில் வைத்து நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி விலக்கு பகுதியில் விற்பனை செய்து வந்தார்.

மணிகண்டனுக்கு உதவியாக தம்பி சபரீஸ்வரனும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர்கள் 2 பேரும் இரவு நேரத்தில் சுத்தமல்லியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் தங்கி இருப்பார்கள். மணிகண்டன், சபரீஸ்வரன் இருவரும் தினமும் தந்தை நாகராஜிடம் போனில் பேசுவார்கள். அதேபோல் கடந்த 9-ந்் தேதியும் தந்தையிடம் பேசினர்.

போலீசில் புகார்

அதன்பிறகு மணிகண்டனிடம் இருந்து தந்தைக்கு போன் அழைப்பு இல்லை. இதையடுத்து நாகராஜ், மணிகண்டன் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜ், நெல்லை பகுதியில் மற்ற இடங்களில் வெங்காயம் வியாபாரம் செய்யும் உறவினர்களை தொடர்பு கொண்டு மணிகண்டன் பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டார்.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் சுத்தமல்லி பகுதிக்கு சென்று மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் தேடி பார்த்தனர். அப்போது அவர்களது லோடு ஆட்டோ மட்டும் சுத்தமல்லி அருகே கொண்டாநகரம் ரெயில்வே கேட் பகுதியில் அனாதையாக நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தந்தை நாகராஜ் வந்து சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கொடூரக்கொலை

இதுபற்றி சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், சுத்தமல்லியை அடுத்த ராஜீவ்நகரை சேர்ந்த சுப்பையா மகன்கள் சதீஷ்குமார் (23), பார்த்தீபன் (22) ஆகிய இருவரும் மணிகண்டன், சபரீஸ்வரனை அடுத்தடுத்து அழைத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சேரன்மாதேவி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார், சந்தேகத்தின் பேரில் சதீஷ்குமார், பார்த்தீபன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 2 பேரும் சேர்ந்து மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து, உடல்களை ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தகவலை கூறினர். மேலும், அவர்கள் அளித்த தகவலின்பேரில், கொண்டாநகரம் ரெயில்வே கேட் அருகே பாழடைந்த கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

காரணம் என்ன?

பின்னர் போலீசார் பயங்கர கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. மணிகண்டன், சதீஷ்குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். அதை திரும்ப கேட்டபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. மேலும் சதீஷ்குமார் மீது பேட்டை போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதற்கு மணிகண்டன் தான் காரணம் என சதீஷ்குமார் எண்ணினார்.

இந்தநிலையில் சதீஷ்குமார், பார்த்தீபன் தரப்பினர் மணிகண்டனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்கள். அதன்படி மணிகண்டனை, சதீஷ்குமார் மதுகுடிக்க வருமாறு அழைத்துள்ளார் அதை நம்பி வந்த மணிகண்டனை நன்றாக மதுகுடிக்க வைத்து போதை ஏறியதும், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அண்ணனை அழைத்து வந்த விவரம் தம்பிக்கு தெரியும் என்பதால் அவரையும் தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சபரீஸ்வரன் தங்கி இருந்த பகுதிக்கு சென்று, அவரை மணிகண்டன் அழைத்து வரச் சொன்னதாக கூறி, அதேஇடத்திற்கு கூட்டிச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

2 பேர் கைது

பின்னர் 2 பேரது உடல்களையும் தார்ப்பாய் போட்டு மூடி, அதன்மீது செங்கல்களை வைத்து மறைத்தனர். இந்த தகவல்களை 2 பேரும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்து உள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சதீஷ்குமார், பார்த்தீபன் ஆகியோரை சுத்தமல்லி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலைமறியல்

இதுபற்றி தகவல் அறிந்த மணிகண்டன், சபரீஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை சுத்தமல்லி விலக்கு பகுதிக்கு வந்து கதறி அழுதனர்.

பிற்பகலில் ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்றனர். அங்கு 2 பேரது உடல்களையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story