சாலையோரம் குப்பைகளுக்கு தீவைப்பு

ஆத்தூரில் சாலையோரம் குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செம்பட்டி அருகே, ஆத்தூர் ஊராட்சியில் உள்ள, வார்டுகளில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை ஆத்தூர் தாலுகா அலுவலகம் பகுதியில் சித்தையன்கோட்டை செல்லும் சாலை ஓரமாக கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகளில் மர்ம மனிதர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது.
அந்த வழியாக சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், சேடப்பட்டி, சொக்கலிங்கபுரம், போடிகாமன்வாடி சித்தரேவு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஆத்தூர் ஒன்றிய அதிகாரிகள், குப்பைகள் கொட்டுவதையும், தீ வைப்பதையும் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.