தருமபுரி மாவட்டத்தில் ஆதார் அட்டையை புதுப்பிக்க சிறப்பு முகாம்-வருகிற 7-ந் தேதி முதல் நடக்கிறது

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ள சிறப்பு முகாம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) முதல் நடக்கிறது.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆதார் புதுப்பிப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெறவும், வங்கி தொடர்பான சேவைகளை பெறவும் பயன்படுகிறது. இந்தநிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை புதுப்பித்து கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகி கட்டணமாக ரூ.50 செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம். 'மை ஆதார்' என்ற இணையதளத்திலும் புதுப்பித்து கொள்ளலாம்.
சிறப்பு முகாம்
ஆதார் புதுப்பிப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு எல்காட் மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி ஒன்றியம் கடகத்தூர் கிராமத்திலும், பாலக்கோடு ஒன்றியம் கரகத அள்ளி கிராமத்திலும், பென்னாகரம் ஒன்றியம் கூத்தப்பாடி கிராமத்திலும், அரூர் ஒன்றியம் சின்னாங்குப்பத்திலும் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
இந்த சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் அதார் அட்டையை புதுப்பித்திட தேவையான ஆவணங்களுடன் சென்று ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.