நிலவில் தடம் பதிக்க தயார் நிலையில் 'சந்திரயான்-3' விண்கலம்: 14-ந் தேதி விண்ணில் பாய்கிறது


நிலவில் தடம் பதிக்க தயார் நிலையில் சந்திரயான்-3 விண்கலம்: 14-ந் தேதி விண்ணில் பாய்கிறது
x

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘சந்திரயான்-3’ விண்கலம் 14-ந் தேதி விண்ணில் பாய்ந்து நிலவில் தடம் பதிக்க இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

சென்னை,

விண்வெளி துறையில் வியக்கத்தகு சாதனைகளை செய்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) லட்சிய கனவு திட்டம் நிலவை ஆய்வு செய்வதாகும்.

இதற்காக பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய அதிக தீவிரம் காட்டுகிறது.

'சந்திரயான்-3' விண்கலம்

ஏற்கனவே சந்திரயான் 1, 2 விண்கலங்கள் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 'சந்திரயான்-3' விண்கலம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள 'எல்.வி.எம்.3 எம் 4' ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது.

திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் விண்ணில் பாயும் ராக்கெட் 4 டன் எடையை புவிநிலை சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லும்.

சந்திரயான்-3 விண்கலம், ராக்கெட்டில் இணைக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பும் பணியும் நிறைவடைந்து உள்ளது. தற்போது விண்ணில் ஏவுதற்கு ராக்கெட் தயார் நிலையில் இருக்கிறது.

ரூ.615 கோடி

இதுகுறித்து இஸ்ரோ விஞஞானிகள் கூறியதாவது:-

சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020-ம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. இந்தியாவின் குண்டு பையன் மற்றும் பாகுபலி ராக்கெட் என்ற செல்லப்பெயர்களை கொண்ட அதிக எடையை தாங்கி செல்லும் 'ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3' ராக்கெட் தற்போது எல்.வி.எம்.3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.

இமாலய சாதனை

ராக்கெட் ஏவுதலின்போது எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில், கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதிக எரிபொருளும் சேர்க்கப்பட்டு உள்ளது. நிலவில் தரையிறங்கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. லேண்டர் தொடர்ந்து இயங்க அதிக ஆற்றல் உற்பத்திக்காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

மற்றொரு கூடுதல் சென்சாரும் இப்போது சேர்க்கப்பட்டு உள்ளது. கடந்த முறை கனநொடியில் வெற்றி கைத்தவறிய சூழலில், இம்முறை நிலவில் சந்திரயான் 3 இமாலய சாதனையை தனதாக்கும் என நம்பப்படுகிறது. அத்துடன், இந்த சந்திரயான் 3 திட்டம் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்விற்கு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணியான 'கவுண்ட் டவுன்' வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்திய விண்வெளித்துறையின் செயலாளரும், இஸ்ரோ தலைவருமான எஸ்.சோமநாத் கூறும்போது, 'விண்வெளி நிறுவனம் வருகிற 14-ந் தேதி விண்ணில் ஏவும் சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்டு 23 அல்லது 24-ந் தேதி நிலவில் லேண்டரை தரையிறக்க முயற்சிக்கும்' என்றார்.


Next Story