ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு


ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்  திடீர் ஆய்வு
x

ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு செய்தார்.

திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு இன்று இரவு 8 மணி அளவில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் உள்ள வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கக் கூடிய படுக்கைகளுக்கு தினமும் போர்வைகள், பெட்ஷீட்டுகளை மாற்ற வேண்டும். மருத்துவமனையில் உள்ள அனைத்து கழிவறைகளும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறார்களா அதற்கான பணியாளர்கள் இருக்கிறார்களா என முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அடிப்படை வசதி

மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்து ஆய்வு செய்ய இங்கு வந்துள்ளேன். ஆரணி அரசு மருத்துவமனைக்கு அதிநவீன சி.டி. ஸ்கேன் வசதி தொடங்கப்பட உள்ளது

அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரணி அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது. மருத்துவமனை சுற்றிலும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றினையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டெங்கு காய்ச்சல் பரவ பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய கொசு உற்பத்தி அதிகரிக்கும். ஆகவே டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கவர்கள் போன்றவைகளை உடனுக்கு உடன் அழித்து விட வேண்டும்.

விழிப்புணர்வு

குழந்ைத திருமணங்களை தடுக்க கல்வித்துறை மூலமாகவும், சமூக பாதுகாப்புத்துறை மூலமாகவும், காவல்துறை மூலமாகவும் பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி செவிலியர்கள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரணி அரசு மருத்துவமனைக்கு தேவைகள் குறித்து தகவல்களை கேட்டு அறிந்து அவற்றினை வரும் பட்ஜெட் கூட்டத்திலேயே தகவல் தெரிவித்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாம்பு கடித்த பெண்

பின்னர் அவர் மருத்துவமனை வளாகத்தில் அவசர பிரிவில் பார்வையிட வந்தார். அப்போது ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா ( வயது 20) என்ற பெண்ணை பாம்பு கடித்ததாகவும் கூறி உறவினர்கள் அழைத்து வந்தனர்.

மேலும் அவர்கள் கடித்த பாம்பை அடித்து கொன்று எடுத்து வந்தனர். உடனடியாக அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாபுஜி நவமணி, மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) நந்தினி, ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, தாசில்தார் ரா.மஞ்சுளா, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயராணி ரவி, டாக்டர் கவிமணி மற்றும் மருத்துவ குழுவினர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.


Next Story