ராஜபாளையம் அருகே குழந்தை திருமணம்:வாலிபருடன் முதலிரவு அறையில் இருந்த 12 வயது சிறுமியை மீட்ட போலீசார்


ராஜபாளையம் அருகே குழந்தை திருமணம்:வாலிபருடன் முதலிரவு அறையில் இருந்த 12 வயது சிறுமியை மீட்ட போலீசார்
x
தினத்தந்தி 10 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 6:46 PM GMT)

ராஜபாளையம் அருகே நடந்த குழந்தை திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் இரவு அறையில் இருந்த 12 வயது சிறுமியை போலீசார் அதிரடியாக மீட்டனர். திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே நடந்த குழந்தை திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் இரவு அறையில் இருந்த 12 வயது சிறுமியை போலீசார் அதிரடியாக மீட்டனர். திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு திருமணம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக சைல்டுலைன் அமைப்பின் 1098 என்ற இலவச ேசவை எண்ணில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட சைல்டு லைன் களப்பணியாளர் அன்புச்செல்வி உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த சிறுமிக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் திருமணம் நடந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், சேத்தூரில் உள்ள மாப்பிள்ளை வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் சிறுமியும், மாப்பிள்ளையும் முதல் இரவு அறைக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், போலீசார், உடனடியாக 2 பேரையும் அழைத்து வருமாறு கூறினர். அதன்படி முதல் இரவு அறையில் இருந்து வெளியே வந்த சிறுமியை மீட்டனர். மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

இதில் இருகுடும்பத்தினரும் உறவினர்கள் என்பதும், பெற்றோர்கள் இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்ய பேசி முடித்துள்ளனர். இதனால் சிறுமியும், வாலிபரும் பழகி வந்ததும், இருவீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து அலுவலர் கோவிந்தம்மாள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவரை திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.

4 பேர் வழக்கு

மேலும் சிறுமியின் தாய், தந்தை, வாலிபரின் பெற்றோர் என 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story