குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டை அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம்
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவிருந்தாள்புரம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. பழுதடைந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை. வினியோகம் செய்யப்படும் குடிநீர் முறையாக வருவதில்லை.
இதனால் 3 கி.மீ தூரம் நடந்து சென்று குடிநீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளிகள் தினமும் ரூ.20 கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை மறியல்
இதுகுறித்து அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கோட்டூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தே நவாஸ், தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது மாலைக்குள் குடிநீர் கிடைக்க வழிவகை மேற்கொள்ளப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தினால் அருப்புக்கோட்டை - கோட்டூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.