தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 55 டாஸ்மாக் பார்கள் மூடல்

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 55 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 55 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடைகள்
தேனி மாவட்டத்தில் மொத்தம் 90 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளையொட்டி மதுபான பார் நடத்துவதற்கு டாஸ்மாக் நிறுவனத்திடம் உரிமம்பெற வேண்டும். அதற்கு பொது ஏலம் மூலம் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தேனி மாவட்டத்தில் 13 டாஸ்மாக் கடைகளுடன் மட்டுமே மதுபான பார்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற டாஸ்மாக் கடைகளுடன் பார்கள் நடத்த அனுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை. இருப்பினும் மாவட்டத்தில் பல இடங்களிலும் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வந்தன. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற அனுமதியற்ற பார்களில், டாஸ்மாக் மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து இதுபோன்ற புகார்களின் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 55 டாஸ்மாக் பார்களை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் மூடியுள்ளனர்.
55 பார்கள் மூடல்
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "டாஸ்மாக் பார்களை அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும். பார்கள் ஏலம் எடுத்தவர்கள் தின்பண்டங்கள் விற்பனை செய்யலாம். ஆனால், பாரில் நேரடியாக மதுவிற்பனை செய்யக்கூடாது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்படுவதாக டாஸ்மாக் அலுவலகத்துக்கும், அரசுக்கும் வந்த புகார்களை தொடர்ந்து 55 பார்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலமாக இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற இடங்களில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டாலும் டாஸ்மாக் அலுவலகத்துக்கு புகார் கொடுக்கலாம். அவற்றையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.