மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளி மாணவன் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பள்ளி மாணவன் பலியானான்.
வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஷேக் அக்ரம். இவருடைய மகன் ஆசிப் அக்ரம் (வயது 17) வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்று முன்தினம் ஆசிப் அக்ரம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி நண்பன் ஆகாஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நண்பனை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளை ஆசிப் அக்ரம் ஓட்டினான். பின்னால் ஆகாஷ் அமர்ந்திருந்தான். சென்னை-பெங்களூரு அணுகுசாலை கருகம்புத்தூர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், ஆசிப் அக்ரம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதின. இதில், ஆசிப் அக்ரம் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த செம்பேடு பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆகாசிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆசிப் அக்ரமை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.