ஏரி மதகை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய பணியாளர்கள்


சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணிக்காக ஏரி மதகை உடைத்து தண்ணீரை வெளியேற்றிய பணியாளர்களை பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

ராணிப்பேட்டை

மதகு உடைப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. இந்தநிலையில் சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு ஏரி நிரம்பியது இடையூறாக உள்ளதாக, சாலை அமைக்கும் பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தை கொண்டு, ஏரி உபரிநீர் வெளியேறும் மதகை உடைத்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்தை விரட்டி அடித்தனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பின்னர் பொக்லைன் எந்திரத்தால் உடைக்கப்பட்ட மதகு பகுதியை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மண்ணைக்கொண்டு அடைத்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். கிராமத்திற்கு குடிநீர் மற்றும் 300 ஏக்கர் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஏரியை உடைத்த சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை கட்டுமான பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story