கடலூா் மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் குப்புசாமி தகவல்

கடலூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளதாக வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து கடலூர் மாவட்ட ஆய்வு அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் குப்புசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 2022-2023-ம் நிதி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாத சுமார் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கப்பட உள்ளது.
எழுத்தறிவு இல்லை
கடலூர் மாவட்டத்தில் சுமார் 21,028 பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர். அவர் களுக்கு தன்னார்வலர்கள் எழுத்தறிவு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் பயன் அடைவார்கள். கற்போருக்கு பயிற்சி முடிவில் மதிப்பீட்டு தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே இந்த திட்டத்தை அனைத்து இடங்களுக்கும் தன்னார்வலர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது.