தர்மபுரி அருகே ஓடையில் மூழ்கி தொழிலாளி சாவு

தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள செல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதலைமுத்து (வயது 47). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மதலை முத்து கேரளாவில் தங்கி வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் ஊருக்கு வந்த மதலைமுத்து செல்லியம்பட்டி அருகே உள்ள முடக்குப்பள்ளம் ஓடையில் குளிக்க சென்றார். ஓடைக்குள் இறங்கி குளித்தவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வெளியே வரவில்லை. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் உடனடியாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றி தர்மபுரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் ஓடையில் இறங்கி தேடினார்கள். அப்போது ஓடைக்குள் மூழ்கி மதலை முத்து இறந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவருடைய உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.