ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

கெலமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே மீன் பிடிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கவுதாளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 46). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ராஜப்பாவுக்கு கையில் அடிபட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் அவர் ஏரிகளை குத்தகைக்கு எடுத்து மீன்பிடித்து விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் பிதிரெட்டி ஏரியில் மீன்பிடிக்க சென்ற அவர் இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினர் நேற்று காலை பிதிரெட்டி ஏரிக்கு சென்று பார்த்தனர்.
ஏரியில் பிணம்
அப்போது ஏரியில் ராஜப்பா பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மீன்பிடிக்கும் போது மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.