ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து, சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். மேலும் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆடி மாதம் கடந்த 17-ந்தேதி பிறந்தது. இதையடுத்து ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், பத்ரகாளிபுரம் பத்ரகாளி அம்மன் ேகாவில், உப்புக்கோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். குறிப்பாக பெண்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதுதவிர ஏராளமான பக்தர்கள் கூழ் காய்ச்சி அம்மன் முன்பு வைத்து வழிபாடு நடத்தினர். அதன்பிறகு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
பக்தர்கள் வழிபாடு
இதேபோல் போடி சீனிவாச பெருமாள் கோவிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். மேலும் போடி சாலை காளியம்மன் கோவில், ஆதிபராசக்தி கோவில், சவுடம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிசி மாவு உள்ளிட்ட 11 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.