சோழர் கால தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டெடுப்பு

எண்ணாயிரம் கிராமத்தில் சோழர் கால தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டெடுப்பு
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட எண்ணாயிரம் கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது சோழர் காலத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டறியப்பட்டது. இதுபற்றி செங்குட்டுவன் கூறும்போது,
வரலாற்று சிறப்பு வாய்ந்த எண்ணாயிரம் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி மூர்த்தி குளம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தபோது விளை நிலங்களுக்கு நடுவே மரங்கள் புதர்கள் மண்டியிருக்கும் திட்டு போன்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி சிற்பம் காணப்படுகிறது. வலது காலை தொங்கவிட்டும் இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் அழகே உருவாக வீராசனத்தில் அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. நான்கு கரங்களுடனும் தலை அலங்காரத்துடனும் காட்சி அளிக்கிறார். இவரது காதுகள், கழுத்து, கை மற்றும் கால்களை அணிகலன்கள் அணி செய்கின்றன. வலது கால் முயலகன் மீது அழுத்திய நிலையில் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் காலம் கி.பி.10 அல்லது 11-ம் நூற்றாண்டு ஆகும். தட்சிணாமூர்த்தி சிற்பம் இருக்கும் பகுதியில் ஏற்கனவே சிவாலயம் இருந்து மறைந்துள்ளது. ஆவுடையார் உள்ளிட்ட தடயங்கள் இப்போதும் இங்கு காணப்படுகின்றன. சோழர் காலத்தை சேர்ந்த 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும். இப்பகுதியில் புதைந்துள்ள வரலாற்று தடயங்களை வெளியே கொண்டு வருவதற்கு கிராம மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது எண்ணாயிரம் சமுகநல ஆர்வலர் செல்வராஜா, விழுப்புரம் வக்கீல் சாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.