ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 325 கிராமங்களில் குடிநீர் இணைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 325 கிராமங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 325 கிராமங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜல் ஜீவன் மிஷன்
அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய வீட்டு குடிநீர் இணைப்புகள் ஊரக பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 2020-21 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2023-24-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2020-21-ம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் மற்றும் 15-வது மானிய நிதிக்குழு நிதி ஒதுக்கீட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 496 குக்கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
குடிநீர் இணைப்பு
2022-23-ம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட நிதி ஒதுக்கீட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 325 குக்கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் பங்களிப்பு அவசியம் என்பதால் திட்டத்தின் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு பெறும் பொதுமக்கள், ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் குக்கிராமத்தினை சார்ந்தவர் எனில் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீத தொகையும், இதர பிரிவினர் அதிகம் வசிக்கும் குக்கிராமத்தினை சார்ந்தவர் எனில் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொகையும் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.
குடிநீர் இணைப்புக்கான முன்வைப்பு தொகையாக ரூ.1,000 மற்றும் மாதாந்திர பயனீட்டு தொகையாக ரூ.50-ஐ ஊராட்சிக்கு செலுத்தவும் கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் குடிநீர் உட்கட்டமைப்புகளை பாதுகாத்திடவும், குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தவும் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.