ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு பேட்டி


ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன. இதில் கீழ சித்திரை வீதியையும், கீழ அடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் சாலையில் கிழக்கு வாசல் கோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தின் முதல்நிலையின் மேல்புற சுவர் (கொடுங்கை) கடந்த 5-ந் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பக்தர்கள் இல்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.

அமைச்சர்கள் ஆய்வு

இந்த நிலையில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5-ந்தேதி அதிகாலை ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை (சுவர்) இடிந்து விழுந்தது. உடனடியாக மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று (நேற்று) ஆய்வு செய்தோம்.

ஆய்வறிக்கை

மேலும் இப்பகுதியில் உள்ள 21 கோபுரங்களின் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய தொழில்நுட்ப கழக வல்லுனர்கள் கோபுரத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த ஆய்வறிக்கை கிடைக்கப்பெறும். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும். கிழக்கு கோபுர வாசலை சீர்செய்ய ரூ.1½ கோடி முதல் ரூ.2 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணிகள் ஓராண்டு காலம் நடைபெறும். கோவில் நிதி மற்றும் தனியார் பங்களிப்புடன் பழமை மாறாமல் கோவில் கோபுரம் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story