பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண கல்வித்துறை புதிய முயற்சி


பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண கல்வித்துறை புதிய முயற்சி
x

பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண கல்வித்துறை புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. அதன்படி, இதற்காக செல்போன் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் கலெக்டர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டு பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வி அறிவை புகட்டவும் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய முயற்சியை கல்வித்துறை கையில் எடுத்துள்ளது.

இதற்காக வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்த நவீன தொழில்நுட்ப உதவியுடன் செல்போன் செயலியும், இணைய பயன்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி, பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, மாணவ-மாணவிகளின் இடைநிற்றலுக்கான காரணங்களின் அடிப்படையில், பள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள், மீண்டும் சேர்க்க தேவையில்லாத மாணவர்கள் என 2 பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்றும், 3-வது பிரிவாக விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டியவர்கள் என்றும் பிரிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கணக்கெடுப்பு செயலி

அதேபோல், ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் முதல் 4 வாரத்துக்கு பிறகும் வராத மாணவர்கள் வரை விவரங்களை பிரித்து, அவர்களின் விவரப் பட்டியலை செயலியில் பதிவேற்றம் செய்யவும், அதிலும் குறிப்பாக இதுவரையில் பள்ளியில் சேராத பள்ளி வயது குழந்தைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, அவர்களை வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கவேண்டும். அதனையும் கணக்கெடுப்பு செயலியில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்க்க பிற துறைகளின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பும் அவசியமானது என்பதால், அனைத்து மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் அளவில் 3 அடுக்கு குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

உறுதிப்படுத்த வேண்டும்

அதுமட்டுமல்லாமல், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளில் இடைநிற்றல் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் குறித்த அறிக்கைகளை கவனமாக கையாளவும், ஒவ்வொரு விவரமும் துல்லியமாக இருப்பதையும், கணக்கெடுப்பு செயல்பாடு அனைத்து மாணவர்களையும் சென்றடைவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.


Next Story