பண்ருடடியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கு:போலீசில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி கைது

பண்ருடடியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் போலீசில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி கைது செய்யப்பட்டாா்.
பண்ருட்டி,
விருத்தாசலத்தில் இருந்து முத்தாண்டிக்குப்பத்திற்கு சென்று வரும் அரசு டவுன் பஸ் இரவில், பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரர் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 31-ந்தேதி இரவு பஸ்சை அங்கு நிறுத்திவிட்டு, டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் பெருமாள் ஆகியோர் பஸ்சிலேயே தூங்கினர். அப்போது, மானடிக்குப்பத்தை சேர்ந்த ராஜதுரை(24), முத்தாண்டிக்குப்பம் பிரவீன்குமார்(23), வீரசிங்கன்குப்பம் செல்வமணி(23) ஆகியோர் பஸ்சை தட்டி உள்ளனர். இதுபற்றி முருகன் கேட்ட போது, அவரை தாக்கிவிட்டும், பஸ் கண்ணாடியை உடைத்துவிட்டும் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், முத்தாண்டிக் குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.
இதன்பின்னர் அவர்களை பண்ருட்டியில் உள்ள சிறையில் அடைக்க போலீசார் வாகனத்தில் அழைத்து வந்தனர். அப்போது முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் போடுவதற்காக போலீசார் வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.
அப்போது, பிரவீன்குமார் திடீரென வாகனத்தில் இருந்து குதித்து, தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில், விழுப்புரத்தில் பிரவீன்குமார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று பிரவீன்குமாரை சுற்றி வளைத்து கைது செய்து, பண்ருட்டி சிறையில் அடைத்தனர்.