மகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை கைது; பரபரப்பு வாக்குமூலம்
கோவில்பட்டி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அவரது தந்தையே வெட்டிக் கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அவரது தந்தையே வெட்டிக் கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் வெட்டிக் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டுராமன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 55). கூலித்தொழிலாளியான இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் முத்துக்குமார் (27). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் முத்துக்குமார் மதுபோதையில் அரிவாளுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது, அங்கு இருந்து முத்துராஜிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்ட முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட முத்துராஜ் தனது மகனிடம் இருந்து அரிவாளை பிடுங்கினார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் அரிவாளால் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் முத்துராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
தந்தை கைது
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துராஜை வலைவீசி தேடினர்.
இந்தநிலையில் நேற்று சாலைப்புதூர் அருகே நின்று கொண்டிருந்த முத்துராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வாக்குமூலம்
பின்னர் அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது மகன் முத்துக்குமார் வேலைக்கு செல்லாமல், ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றிக் கொண்டு, தினசரி குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்தான். இதேபோல் நேற்று இரவும் (அதாவது நேற்று முன்தினம் இரவு) மதுபோதையில் வந்து தகராறு செய்ததை நான் தட்டிக் கேட்டேன். அவன் அரிவாளால் என்னை வெட்ட வந்தான். அவனை கீழே தள்ளி அவனிடம் இருந்து அரிவாளை பறித்து நான் வெட்டினேன். இதில் அவன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான். பின்னர் நான் அங்கிருந்து ஓடி விட்டேன். போலீசார் தேடிப்பிடித்து என்னை கைது செய்துவிட்டனர் என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் முத்துராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.