நீலகிரி மலைப்பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; வினாடிக்கு 9,500 கன அடி உபரிநீர் திறப்பு

நீலகிரி மலைப்பகுதியில் கனமழை எதிரொலியாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர்
நீலகிரி மலைப்பகுதியில் கனமழை எதிரொலியாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
102 அடி
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதன்காரணமாக கடந்த மாதம் 5-ந் தேதி காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 102 அடியை எட்டியது. இதையடுத்து உபரிநீர் அணையின் மேல் மதகு மற்றும் கீழ் மதகு வழியாக பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையில் வகுக்கப்பட்ட விதியின்படி அக்டோபர் மாதம் இறுதிவரை 102 அடிவரையிலும் நவம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடிவரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வரத்து அதிகரிப்பு
அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 800 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரிநீராக 5 ஆயிரத்து 100 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 5-ந் தேதியில் இருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடித்து வருகிறது.