இந்தியா பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது

இந்தியா பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
இந்தியா பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்றார்
இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் நேற்று மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தார்.அங்கு வந்த அவர், ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு ஆதீனம் சார்பில் நினைவு பரிசு மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது
பின்னர் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக மாறும். தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும்.
ஆன்மிக அறிவியல் குறித்து ஆராய்ச்சி
மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மிக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிவன் தனது குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டார்.