தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித மணலை எடுத்து வழிபட்டனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு இந்த திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வில்லிசை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டனர். மதியம் சிறப்பு அபிஷேகம், மாலையில் மாவிளக்கு பூஜை, இரவில் புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, உற்சவர் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான நேற்று காலையில் 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்பட்டார். மாலை 5.45 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இளநீர் என்ற கள்ளரை சுவாமி வெட்டியதும், தேரி மணலில் தண்ணீர் தெறித்து விழுந்தது. அப்போது கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித மணலை போட்டி போட்டு அள்ளி சென்றனர். பக்தர்கள் புனித மணலை தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். சுபகாரியங்கள் நடைபெறும்போது புனித மணலை பயன்படுத்துவார்கள். உடல் நலம் குன்றியவர்களின் நோய் குணமாக வேண்டியும் புனித மணலை உடலில் பூசுவார்கள்.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து தங்கியிருந்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் தேரிக்குடியிருப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.