பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 28-ந் தேதி கும்பாபிஷேக விழா

பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 28-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள் மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள், திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோவில் கட்டி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேவர் குருபூஜையுடன், கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
வருகிற 30-ந் தேதி தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28-ந் தேதி ஆன்மிக விழாவும், அக்டோபர் 29-ல் அரசியல் விழாவும், 30-ந் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர் கோவில், சுப்பிரமணியர் கோவில், முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகிற 27-ந்் தேதி காலை 9 மணிக்கு அனுக்சை, விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணி முதலாம் காலை யாக பூஜைகளும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு தீபாராதனைகளும் நடைபெற உள்ளன. இதுகுறித்து தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் கூறியதாவது:- தேவர் நினைவிடத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் யாகசாலை பூஜையில் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட உள்ளது என்றார்.