மீன்-இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

மீன்-இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடந்தது.
மீன்-இறைச்சி கடைகளில் ஆய்வு
கரூர் சட்டமுறை எடை அளவுகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரியும், தொழிலாளர் உதவி ஆணையருமான ராமராஜ் தலைமையில் சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அதிகாரி தங்கையன் மற்றும் போலீசார் கரூர் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் உள்ள மின்னணு தராசுகள், விட்ட தராசுகள், மீசை தராசுகள் மற்றும் எடை கற்கள் ஆகியவை முத்திரை இடப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் சட்டத்துறை எடை அளவு சட்டம் 2009 மற்றும் அமலாக்க விதிகள் 2011 கீழ் மறு முத்திரை இடப்படாத எடை அளவுகள், மறுபரிசீலனைச் சான்று காட்டி வைக்கப்படாமல் சோதனை எடை கற்கள் வைத்திருப்பது தொடர்பாக 20 கடைகளில் கூட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் முத்திரை இடாத தராசுகள் மற்றும் எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அபராதம் விதிக்கப்படும்
மறுபரிசீலனை சான்று காட்டி வைக்கப்படாதது தொடர்பாக இசைவு தீர்வு கட்டண அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முத்திரையிடாமல் எடை அளவுகள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டால் ரூ. 5 ஆயிரம் முதல் அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரப் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் எடை அளவுகள் உரிய காலத்தில் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரை இட வேண்டும் என்று கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.