திருபாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருபாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் ஊராட்சியில் 108 திவ்யதேசங்களில் 107-வது திவ்யதேசமான அலமேல்மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் சிவலிங்கத்தின் மேல் பெருமாள் காட்சியளிக்கிறார். அரியும் சிவனும் ஒன்றாக காட்சி அளிக்ககூடிய புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு பெருமாள் திருவீதி உலா நடைபெறும்.
விழாவைமுன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கூட்ட நெரிசலை தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு வரிசையில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதார பணிகள் போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள், 350 போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் சென்று வர காவேரிப்பாக்கம், ஆற்காட்டில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை நேற்று இணை ஆணையர் லட்சுமணன், செயல் அலுவலர் ஏகவள்ளி ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் பக்தர்கள், பொதுமக்கள் கோவிலுக்கு வரும் போது முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.