டாக்டர்கள்- நர்சுகள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள்- நர்சுகள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள்- நர்சுகள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாக்டர்கள் பற்றாக்குறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் தான் சீர்காழி நகர் பகுதி மக்கள் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, மாதானம், புதுப்பட்டினம், பழையாறு, திருமுல்லைவாசல், எடமணல், மகேந்திரப்பள்ளி, புத்தூர், குன்னம், பெரம்பூர், கொண்டல், அகனி, வள்ளுவக்குடி, திருப்புன்கூர், பெருமங்கலம், ஆதமங்கலம், பூம்புகார், மங்கைமடம், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, வானகிரி, பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளது.
இல்லை என்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டும். சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் மிகவும் குறைவான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள் அவதி
இதனால் இந்த ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் போதிய டாக்டர்கள்- செவிலியர்கள் இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் போதிய டாக்டர்கள் பணியில் இல்லாததால் சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட தூரம் செல்வதால் அடிக்கடி உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக இங்கு மகப்பேறு பெண் டாக்டர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். அறுவை சிகிச்சை என்றால் சிதம்பரம் அல்லது திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா கூறுகையில், சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் போதிய கட்டிடங்கள் இருந்தும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக மகப்பேறு டாக்டர்கள் இல்லாததால் சீர்காழி பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மயிலாடுதுறை, திருவாரூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். மேலும் இரவு நேரங்களிலும் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
போராட்டம்
இதனால் மருத்துவத்துறைக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இல்லை என்றால் பொது மக்களை ஒன்று திரட்டி காலி பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.