திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளியிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விடிய,விடிய விசாரணை

கோவை கார் வெடிப்பில் கைதானவர்கள் தொடர்பு கொண்டதாக கூறப்படும் திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனர்.
கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜமேஷா முபின் மற்றும் கைதானவர்கள் யார்? யாரை? தொடர்பு கொண்டு பேசினார்கள் என்ற பட்டியலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்தனர்.
அப்போது இந்த வழக்கில் கைதானவர்கள் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் வசித்து வரும் பனியன் நிறுவன தொழிலாளி அப்துல் ரசாக் (வயது 30) என்பவருடன் பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு திருப்பூர் வந்தனர். பின்னர் நல்லூர் போலீசார் உதவியுடன் அப்துல் ரசாக்கை நல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அந்த விசாரணை விடிய விடிய நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை புறப்பட்டு சென்றனர். இவர் ஏற்கனவே 2017-ம் ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கை
முதலில் நல்லூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பின்பு விசாரணை நடத்தும் இடம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதால், கனியாம்பூண்டி, நல்லூர் என இடங்களை மாற்றி மாற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை அறிக்கையை என்.ஐ.ஏ. சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து என்.ஐ.ஏ. தான் முடிவு செய்யும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.