பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதானகுளச்சல் வாலிபரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை


பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதானகுளச்சல் வாலிபரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
x

மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான குளச்சல் வாலிபரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, லேப்-டாப் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல் :

மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான குளச்சல் வாலிபரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, லேப்-டாப் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

மண்டைக்காடு அருகே உள்ள கருமங்கூடலை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 55), தொழில் அதிபர். இவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த ஷோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது. மேலும் சைக்கிளும் எரிந்து நாசமானது. மேலும் கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்ற காட்சியும் பதிவாயிருந்தது.

குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து கல்யாணசுந்தரம் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.

குளச்சல் வாலிபர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கோர்ட்டில் அனுமதி பெற்று நேற்று துணைசூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலான போலீசார் இலப்பைவிளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

லேப்-டாப் பறிமுதல்

சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் முஸ்ஸாமில் வீட்டில் இருந்து ஒரு லேப்-டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு மற்றும் ஆவணங்களை எடுத்து சென்றனர்.

இந்த சோதனையின் போது குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர். போலீசார் நடத்திய சோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

சோதனை முடிந்து வெளியே வந்த துணைசூப்பிரண்டு தங்கராமனிடம், என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'சோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்' என்று கூறினார்.


Next Story