புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா


புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
x
திருப்பூர்


சேவூர் முறியாண்டம்பாளையம் காமராஜர் நகரில் உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு-பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பொங்கல் விழா

சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும் மாட்டூர் அறவா என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராணப்பெயர் ரிஷபாபுரி (மாட்டூர்). அதாவது மாடும், புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆன்மிகத் திருத்தலமான சேவூர் முறியாண்டம்பாளையம் காமராஜ் நகரில் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புற்றுக்கண் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆத்ம ஞானமும், திவ்ய வரம் அருளும் கற்பூர நாயகி அன்னை பராசக்தியாய் புற்றுக்கண் கொண்டு வேண்டும் வரம் தரும் அன்னை புற்றுக்கண் மாரியம்மனுக்கு முதலாம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் திருவிழா கடந்த 25-ந் தேதி கம்பம் நடுதல், காப்பு கட்டுடன் தொடங்கியது.

மாவிளக்கு

இதையடுத்து மாரியம்மனுக்கு, தினசரி காலை பூஜை, மதிய உச்சி பூஜை, மாலை சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, தினசரி காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை (திங்கட்கிழமை) வரை தொடர்ந்து நடக்கிறது. தினசரி இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு, அம்மன் அனிக்கூடை புறப்பாடு, நள்ளிரவு 12 மணிக்கு பூசணி வதம் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியாக 3-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு சிவன் சக்தி கரகம் அழைப்பு, சாமி அழைப்பு உற்சவம். காலை 6 மணிக்கு அடி அளந்து கொடுத்தல், காலை 7 மணிக்கு சேவூர் கூட்டுறவு வங்கி எதிரே அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வருதல், காலை 8 மணிக்கு சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், காலை 9 மணிக்கு திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடக்கிறது.

காலை 10 மணிக்கு பூவோடு எடுத்தல் கம்பம் சுற்றி ஆடுதல், இரவு 7 மணிக்கு கம்பம் களைதல், இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இதை தொடர்ந்து 4-ந்தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடல், பிரசாதம் வழங்குதல், பகல் 12 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. திருவிழா நிகழ்ச்சிகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


Next Story