பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம்:விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்


பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம்:விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்ட இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிவேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உதவித் தொகை

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டமானது 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி செய்வது அவசியம். நடப்பாண்டில், 13-வது தவணையாக, அதாவது டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை உள்ள காலத்துக்கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ஆதார் எண்

ஆகையால் பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவோ ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் செல்போனில் இணையதள வசதியை பயன்படுத்தி https://pmkisan.gov.inஎனும் இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story