மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியார் துறைகளை ஒருங்கிணைத்து, வேலை வாய்ப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
வேலை வாய்ப்பு முகாம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் தனியார் துறைகளிலும் பணியிடங்கள் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் மனுக்களை வழங்கி கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் முகாம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் அலுவலகத்தில், வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் தஞ்சை மற்றும் திருச்சியில் உள்ள தனியார் துறையைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 75 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பணிநியமன ஆணை
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பேசியதாவது:-தஞ்சை மாவட்டத்தில் முதன் முறையாக தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமப்படக்கூடாது என்பதால், அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இம்முகாம்கள் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்வது நமது பொறுப்பு, அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். இதற்காக தற்போது தனியார் துறைகளை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களை தேர்ந்தெடுத்த நிறுவனங்களில் பணிபுரிவார்கள். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஆசையாகும். நீங்கள் அரசு வேலை கிடைக்கும் வரை தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உறுதியாக பற்றி கொள்ளுங்கள்.
அனைத்து உதவிகளும் செய்யப்படும்
உங்களுக்கு தஞ்சை நகரை ஒட்டி உள்ள நிறுவனங்களிலேயே வேலை கிடைத்துள்ளது. நன்றாக உழைத்து வாழ்வில் முன்னேறுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.