அதிக மதிப்பெண்கள் பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு பரிசுத்தொகை


அதிக மதிப்பெண்கள் பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு பரிசுத்தொகை
x
தினத்தந்தி 3 Aug 2023 6:45 PM GMT (Updated: 3 Aug 2023 6:45 PM GMT)

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு பரிசுத்தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

தூத்துக்குடி

ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசாரின் வாரிசுகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 10 இடங்களை பிடிப்பவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கல்வி பரிசுத்தொகை வழங்கப்படும்.

அதேபோன்று போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாரின் வாரிசுகளில் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களின் உயர்கல்வி படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

அதன்படி 2023-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கான கல்வி பரிசுத்தொகை மற்றும் 2020-21-ம் ஆண்டில் மாநில அளவில் மேல்நிலைப்படிப்பில் 100 இடங்களை பிடித்தவர்களுக்கான 2023-ம் ஆண்டுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி, பரிசுத்தொகையை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அமைச்சுப்பணி கண்காணிப்பாளர் மயில்குமார், உதவியாளர் அனிதா கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story