கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.12 கோடியில் சாலை பணிகள்


கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.12 கோடியில் சாலை பணிகள்
x
தினத்தந்தி 18 May 2023 12:30 AM IST (Updated: 18 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.12 கோடியில் சாலை பணிகள் நடந்து வருவதாக ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா கூறினார்.

திருவாரூர்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.12 கோடியில் சாலை பணிகள் நடந்து வருவதாக ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் படித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மயான கொட்டகை

நாகூரான் (அ.தி.மு.க.):- உத்திரங்குடி, மேலஉத்திரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். அபிவித்தீஸ்வரம் மயான கொட்டகையை சீரமைக்க வேண்டும்.

சத்தியேந்திரன் (தி.மு.க.):- எண்கண் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு புதிய திருமண மண்டபம் கட்ட ரூ.3 கோடி, கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஏசுராஜ் (அ.தி.மு.க.):- பெரும்புகழூர் ஊராட்சி வெட்டாற்றில் ரூ.8 லட்சம் மதிப்பில் படித்துறை கட்டியதற்கு நன்றி.

ரேஷன் பொருட்கள்

வாசு (தி.மு.க.):- காட்டூர் ஊராட்சியில் 3 சாலைகள், சமுதாயக்கூடத்தை பழுது நீக்கம் செய்ததற்கு பாராட்டுக்கள்.

கவிதா (இந்திய கம்யூனிஸ்டு):- பெருமாளகரம் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக கிடைப்பதில்லை. முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீரா (அ.தி.மு.க.):- மேலராதாநல்லூர் குழு கட்டிடம் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

துணைத் தலைவர் பாலச்சந்திரன்:- கொரடாச்சேரி ஒன்றியத்தில் தேவைப்படும் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

ரூ.12 கோடியில் சாலை

ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா:-

கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் 28 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் என்ஜினீயர்கள் ரவீந்திரன், சசிரேகா, வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.


Next Story