பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்


பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 8:00 PM GMT (Updated: 6 Oct 2023 8:00 PM GMT)

வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவு பெற்றதை அடுத்து பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல்

ரோப்கார் சேவை

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கானோர் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பக்தர்கள் எளிதில் சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதையே விரும்புகின்றனர். இந்த ரோப்கார் இயக்கத்துக்காக அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சோதனை ஓட்டம்

ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும். பலமாக காற்று வீசும்போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதோடு பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்காரில் தினமும், மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கியது.

அதில் ரோப்கார் பெட்டிகள், உபகரணங்கள், 'சாப்ட்டு' எந்திரம் ஆகியவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் நேற்று ரோப்காரில் பெட்டிகள் மாற்றப்பட்டு, முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது ரோப்கார் பெட்டிகளில் தலா 300 கிலோ பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து ரோப்கார் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதன் இயக்கத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

விரைவில் சேவை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நேற்று ரோப்கார் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) 2-ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அதன்பிறகு வல்லுனர்குழுவினர் ஆய்வு செய்வார்கள். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப்கார் சேவை தொடங்கும் என்றனர்.


Next Story